Sunday, December 23, 2012

கற்பழிப்புகள் நடப்பது ஏன்?

முதலில் நான் சொல்ல விரும்புவது - புது தில்லியில் நடந்தது ஒரு கொடுமையான சம்பவம். அதை குறித்து பேசி பெயர் வாங்குவது அல்ல இந்த பதிவின் நோக்கம். "கற்பழிப்புகள் ஏன் நடக்கின்றன? அவற்றை தடுக்க நம்மால் முடியுமா?" என்ற எனது சிந்தனையின் விளைவே இந்த பதிவு.

பொதுவாக ஆண்களிடம் பெண்கள் நமக்கு கீழ்பட்டவர்கள் என்ற எண்ணம் உள்ளது. இதிலே நாடு, மதம், இனம் என்ற வேறுபாடுகள் கிடையாது. உதாரணமாக, பெண்கள் மிகவும் முன்னேறியவர்கள் என்று நாம் கருதும் மேலை நாடுகளில் கூட, திருமணத்திற்குப் பிறகு கணவனின் குடும்பப் பெயர் (surname or last name), மனைவியின் குடும்பப் பெயராக அமைகிறது. இந்த எண்ணத்தின் விகாரமற்ற வடிவம் மேலை நாடுகளில் உள்ள "பெண் விடுதலை" (அங்கேயும் குடும்பப் பெயர்கள் மாறுகின்றன என்பதை கவனிக்கவும்). இந்த எண்ணம் சற்று கடினமான குணமாக மாறும் பொழுது தவறான எண்ணங்களும், பெண்கள் போக பொருட்கள் என்ற எண்ணமும் உருவாகிறது. 

இதற்கு சினிமாவும், மீடியாவும் முக்கிய காரணம். இவர்கள் என்ன தான் "மக்கள் ரசிக்கிறார்கள், அதைதான் நாங்கள் படமாகவும், நெடும் தொடராகவும் எடுக்கிறோம்" என்று கூறினாலும் செய்வது தவறுதான். சினிமாக்களில் item song என்பது ஒரு நிரந்தர பகுதி ஆகி விட்டது.  எத்தனையோ நெடும் தொடர்களில், திருமணத்திற்குப் பிறகு வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொள்வது,  சின்ன வீடு செட்டப் செய்து கொள்வது என்பது சாதாரணம். இவ்வளவு ஏன், நமது உடல் நாற்றத்தை தடுக்கவும், ஆரோக்கியத்திற்கு உதவும் Body Spray கூட, பெண்களை (அதுவும் பிற திருமணமான பெண்களை கூட) கவரும் ஒரு சாதனம் என்ற அளவில் விளம்பரம் செய்ய படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு தினமலர் வாரமலரில் "இது உங்கள் இடம்" பகுதியில் ஒரு வாசகர் இது குறித்து எழுதி இருந்தார். அவருக்கு தெரிந்த, மிகவும் படிப்பறிவில்லாத ஒருவன், தனக்கு குறைந்த சம்பளம் இருந்தாலும், பெண்கள் கிடைப்பார்கள் என்ற ஆசையில், இந்த விளம்பரங்களை நம்பி பல நூறு ரூபாய்களை இந்த சாதனங்களில் செலவு செய்ததாக கூறினார். இப்படி மக்களின் வக்கிர எண்ணங்களை தூண்டி விட்டு பணம் பார்க்கும் வேலையை சின்ன மற்றும் பெரிய திரைகளில் செய்கிறார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. 9ஆம் / 10ஆம் வகுப்பு படிக்கும் (விடலை) சிறுவன் கூட "டேய்!! அது என்னோட பிகர்-டா!! ..." என்று கூறுவதை பெருமையாக நினைக்கும் அளவிற்கு நமது சமுதாயம் சீழ்பட்டு போய்விட்டது.

திருமணமான ஆண்கள் கூட, உடலுறவு கொள்வது என்பது தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் ஒரு செயலாகவே பார்கிறார்கள். ஒரு மனைவி உடலுறவுக்கு அழைத்தால், அவள் மீது சந்தேகம் கொள்வது (அ) அவளை 'தவறாக' நினைப்பது என்பது பொதுவாக நடக்கிறது. 'எனக்கு' எப்பொழுது தேவையோ அப்பொழுது 'நான் அழைப்பேன்' - நீ வந்தே தீர வேண்டும் என்பதே பெரும்பாலானவரின் எண்ணம். உண்மையான பாலியல் கொடுமைகளின் அளவுகோட்டில் பார்த்தால், இந்த திருமணமான உறவுகளுமே கற்பழிப்புகள் தான்!!! 

இந்த "நான் அழைத்தால், நீ வரவேண்டும்" என்ற எண்ணத்தினால், திருமணமான குடும்பத்திற்குள் பெண்களுக்கு மன உளைச்சலை உண்டாக்கும் செயல்களில் பல ஆண்கள் ஈடு படுகிறார்கள். இந்த எண்ணங்கள், வெளி உலகில் வரும்போது வன்முறையாகவும், வக்கிரமான பாலியல் வன்செயலாகவும் வடிவெடுக்கிறது. சில நாட்கள் முன்பு, தனது காதலிற்கு ஒத்துக்கொள்ளாத ஒரு பெண்ணின் முகத்தில் திராவகம் வீசினான் ஒருவன். மற்றும் பலர் இது போன்ற கற்பழிப்புகளில் ஈடுபடுகிறார்கள்.

இவற்றின் தீர்வுதான் என்ன? ஒரு வேலை சரியான முறையில் அளிக்கப்படும் பாலியல் கல்வி நன்மை பயக்குமா?? பல நேரங்களில், மாணவிகளிடம் வன்செயலில் ஈடுபடும் ஆசிரியர்களை பற்றி கேள்வி படுகிறோம். இவர்கள் திருந்தாத வரை பாலியல் கல்வியும் தவறாகத்தான் போகும். கொடுமை செய்யப்படும் சிறுமிகள் / பெண்கள் கூட, அச்சத்தால் இதை மறைக்கிறார்கள். பெற்றோர்கள் அனைவரும் மனம் வைத்தால் ஒரு வேளை விடியல் பிறக்கலாம்.

செய்வோமா???? 

No comments:

Post a Comment